லாரி மீது கார் மோதல்: வாலிபர் பலி- ஓட்டல் உரிமையாளர் படுகாயம்


லாரி மீது கார் மோதல்: வாலிபர் பலி- ஓட்டல் உரிமையாளர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 30 Oct 2019 5:09 PM GMT)

சத்திரப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். நண்பரான ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 33). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய நண்பர் பழனி பாலசமுத்திரத்தை சேர்ந்த நாகராஜ் (33). இவர் சத்திரப்பட்டி பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகர், நாகராஜை அழைத்துக் கொண்டு தனது காரில் ஒட்டன்சத்திரம் சென்றுவிட்டு மீண்டும் சத்திரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை சேகர் ஓட்டினார்.

விருப்பாட்சி மேட்டு பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் மோதிய வேகத்தில் கார் அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நாகராஜூக்கு இடது கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த நாகராஜை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சேகரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story