வங்கி கொள்ளையன் திருவாரூர் சுரேசிடம் போலீசார் மீண்டும் விசாரணை 1¾ கிலோ தங்க நகைகளை மீட்க நடவடிக்கை


வங்கி கொள்ளையன் திருவாரூர் சுரேசிடம் போலீசார் மீண்டும் விசாரணை 1¾ கிலோ தங்க நகைகளை மீட்க நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2019 11:15 PM GMT (Updated: 30 Oct 2019 6:02 PM GMT)

வங்கி கொள்ளையன் திருவாரூர் சுரேசிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். 1¾ கிலோ தங்க நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

திருச்சி நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 3¾ கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் தலைமையிலான சுரேஷ், மதுரை மாவட்டம் சோழங்கநல்லூர் குருவித்துறை கிராமத்தை சேர்ந்த கணேசன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அடங்கிய கும்பல்தான் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

காவலில் எடுத்து விசாரணை

அதைத்தொடர்ந்து கணேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் கணேசனை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சிவகாமசுந்தரி, கணேசனை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தர விட்டார்.

அதன்பேரில், 13 நாட்கள் கணேசனை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் அவர் கொடுத்த தகவலின்பேரில் சுற்றுலா வேன், லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 1½ கிலோ தங்க நகைகள், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 1½ கிலோ தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதற்கிடையே வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான சுரேசையும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரி கடந்த 23-ந் தேதி ஸ்ரீரங்கம் கோர்ட்டில் கொள்ளிடம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில், சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி வைத்திருந்த ½ கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டன. போலீஸ் காவல் முடிந்து கணேசன் மற்றும் சுரேசை நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக கணேசன் மற்றும் சுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் இதுவரை 2 கிலோ தங்கம் போலீசாரால் மீட்கப்பட்டன.

ரகசிய இடத்தில் வைத்து...

இந்த வழக்கு தொடர்பாக மேலும் 1¾ கிலோ தங்க நகைகளை இன்னும் மீட்க வேண்டியிருப்பதால், சுரேசை மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கொள்ளிடம் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் நேற்று ஸ்ரீரங்கம் கோர்ட்டில் சுரேசை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிகோரி மனு தாக்கல் செய்ததன்பேரில், மாஜிஸ்திரேட்டு சிவகாமசுந்தரி சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதன்பேரில் சுரேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கொள்ளிடம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் சுரேசை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story