புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை: தோட்டத்தில் பிணமாக கிடந்தார்


புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை: தோட்டத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:00 PM GMT (Updated: 30 Oct 2019 6:40 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி புதுப்பாளையம் பிரிவில் ரோட்டோரம் உள்ள ஒரு தோட்டத்துக்கு நேற்று காலை ஒரு சிலர் சென்றனர். அப்போது அங்கு ஆண் ஒருவர் பிணமாக கிடந்ததை பார்த்தனர்.

உடனே இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

இறந்தவர் சத்தியமங்கலம் அருகே உள்ள குட்டி பொம்மனூரை சேர்ந்த பொம்மநாயக்கர் (வயது 80). அவருடைய மனைவி ரங்கம்மாள் (58). இவர்களுக்கு சந்திரசேகர் (58), பழனிசாமி (50) ஆகிய 2 மகன்களும், சுஜாதா (48) என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் பொம்மநாயக்கர் தனது மனைவி ரங்கம்மாளுடன் தனியாக வசித்து வந்தார். விவசாயியான பொம்மநாயக்கர் செண்பகபுதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டை விட்டு் வெளியேறிய பொம்மநாயக்கர், தனது ஸ்கூட்டரை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே வாகன நிறுத்தத்தில் நிறுத்தியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி புதுப்பாளையம் பிரிவுக்கு வந்த அவர் அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story