மாயமான கொத்தனார் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக மீட்பு கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


மாயமான கொத்தனார் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக மீட்பு கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 10:00 PM GMT)

மண்ணச்சநல்லூர் அருகே மாயமான கொத்தனார் 3 நாட்களுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிலையாத்தி குடித்தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 22). கொத்தனாரான இவர் கடந்த 28-ந் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அன்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய் செல்வி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று ஹரிஹரனை தேடினார். ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. 3 நாட்கள் வரை ஹரிஹரன் வீடு திரும்பாததால் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு நேற்று வாத்தலை போலீசில் செல்வி புகார் அளித்தார். அதன்பேரில், ஹரிஹரனை போலீசார் தேடி வந்தனர்.

ஆற்றில் பிணமாக மீட்பு

இந்நிலையில் துடையூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் பழைய மணல் குவாரி அருகே ஆண் ஒருவரது பிணம் தண்ணீரில் மிதப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர், மாயமான கொத்தனார் ஹரிஹரன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக அவரை யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசினரா? அல்லது குளிக்க சென்றபோது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story