2 குழந்தைகளை தவிக்க விட்டு 2-வது திருமணம் செய்த இளம்பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணவர் திடுக்கிடும் புகார்


2 குழந்தைகளை தவிக்க விட்டு 2-வது திருமணம் செய்த இளம்பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணவர் திடுக்கிடும் புகார்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:15 PM GMT (Updated: 30 Oct 2019 10:30 PM GMT)

2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் 2-வது திருமணம் செய்து கொண்டதாக நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணவர் பரபரப்பு புகார் அளித்தார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே காஞ்சாம்புரம் வயக்கல்லூர் காவடி புத்தன்வீட்டை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 39). இவர் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனக்கு (ரமேஷ்குமார்), பிரீத்தி என்பவருடன் 25-9-2009 அன்று திருமணம் நடந்தது. எங்களுக்கு 9 வயது மகனும், 4 வயது மகளும் உள்ளனர். நான் 2017-ம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டேன். அப்போது என் மனைவி ஒரு வாலிபருடன் பழகியுள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் என்னையும், என் 2 குழந்தைகளையும் வேண்டாம் என்றும், நான் தனியாக வாழப்போகிறேன் என்றும் கூறிவிட்டு மனைவி சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியாததால் இதுதொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது எங்களுடன் வாழமாட்டேன் என்று கூறினார்.

2-வது திருமணம்

இந்தநிலையில் என் மனைவி, 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு ஏற்கனவே பழகி வந்த வாலிபரை திருட்டுத்தனமாக 2-வது திருமணம் செய்துள்ளார். இதுபற்றி நான், பிரீத்தியிடம் கேட்ட போது, வாலிபரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறுகிறார். என் மனைவியின் உண்மையான பெயர் பிரீத்தி, ஆனால் என்னிடம், சிந்து என பொய் சொல்லி உள்ளார். மேலும் திருமணத்தின்போது அவருக்கு 17 வயது, ஆனால் 22 வயது என்று கூறி எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

மேலும் நான் வெளிநாட்டில் இருந்தபோது என் மனைவியும், மற்றொரு வாலிபரும் நிர்வாண நிலையில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பிரீத்தியும், அவர் 2-வதாக திருமணம் செய்துகொண்ட வாலிபரும் சேர்ந்து என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த என் மனைவி, 2-வது கணவர், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தவர் மற்றும் என் மனைவியுடன் பழகிய இன்னொரு வாலிபர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அவர்களால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திடுக்கிடும் தகவல்

இந்த மனுதொடர்பாக பிரீத்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

என் தாயார் பெயர் சிந்து ஆகும். எனக்கு 17 வயதிலேயே அவர் திருமணம் செய்து வைத்து விட்டார். அப்போது எனக்கு எதுவும் தெரியாது. நானும், என் தாயாரும் பார்ப்பதற்கு அக்காள், தங்கை போல இருப்போம். எனவே என் தாயார் அவரது பிறப்பு சான்றிதழை காண்பித்து என்னை ரமேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என நினைக்கிறேன். எனவே அந்த திருமணம் செல்லாது.

இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு வாலிபரை 2-வதாக பிரீத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story