கந்தம்பாளையம் அருகே, மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி


கந்தம்பாளையம் அருகே, மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 11:58 PM GMT)

கந்தம்பாளையம் அருகே, மொபட்டும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார்.

கந்தம்பாளையம்,

கந்தம்பாளையம் அருகே உள்ள பீச்சப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நல்லான். இவரது மனைவி ருக்மணி (வயது 55). இவர் நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றார். பின்னர் ஈஸ்வரன் என்பவரது மொபட்டின் பின்னால் உட்கார்ந்து ருக்மணி வீடு திரும்பினார்.

வழியில் பீச்சப்பாளையம் பிரிவு ரோட்டை கடக்க முயன்றபோது, திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி நோக்கி வேகமாக வந்த கார்த்திக் (28) என்பவரது மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மொபட்டும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ருக்மணி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story