ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் தேங்கிய தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்


ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் தேங்கிய தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2019 10:30 PM GMT (Updated: 31 Oct 2019 5:27 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் தேங்கிய தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் இருந்து கிளாக்குளத்துக்கு செல்லும் வழியில் மருதூர் மேலக்கால் அருகில் ரெயில்வே கேட் இருந்தது. இதனை அகற்றி விட்டு, அங்கு ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெய்த மழையில் ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கிளாக்குளம் பகுதி மக்கள் தெற்கு காரசேரி வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி, கருங்குளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

எனவே ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும். ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் தேங்கிய தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், தாதன்குளம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட சென்றனர். அவர்கள் அங்கு செல்வதற்குள், நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற பாசஞ்சர் ரெயில், தாதன்குளத்தை கடந்து சென்றது. பின்னர் அவர்கள், கருங்குளம்-மூலைக்கரைப்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதற்கிடையே அங்கு சென்ற ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றவும், ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கவும் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story