புங்கனூர் பகுதியில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்


புங்கனூர் பகுதியில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 7:14 PM GMT)

புங்கனூர் பகுதியில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வடிகால் வாரி ஆக்கிரமிப்பு தான் இதற்கு காரணம் என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றிலும் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதையடுத்து வழக்கத்தைவிட உற்சாகமான மனநிலையில் விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளனர்.

நெல் சாகுபடி

இந்தநிலையில் பெரும் பாலான பகுதிகளில் மழை வரும் முன்பே மேற்கொள்ளப்பட வேண்டிய வடிகால் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர்வாருதல் போன்ற பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாததால் தண்ணீர் வந்தும் சாகுபடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சோமரசம்பேட்டை அருகே புங்கனூர் கிராமம் காவிரியின் கடை மடை பாசன பகுதியாக அமைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள், 350 ஏக்கர் முதல் 400 ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாகவும், கடைமடையில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாலும் விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கினர்.

தண்ணீரில் மூழ்கின

நாற்று நட்டு, உரமிட்டு உற்சாகமாக பணிகளை தொடங்கிய நிலையில் கடை மடை வழியாக வயல்களுக்கு சென்ற தண்ணீர் மீண்டும் அங்கிருந்து வடியாமல் தேங்கி வருகிறது. குளத்து வடிகால் வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாற்று நட்ட வயல்களில் தொடர்ந்து பல நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளதால், பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தரிசாக கிடந்த நிலங்களில் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் நெல் சாகுபடியை தொடங்கிய நிலையில் இவ்வாறு வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நெல் சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை வரும் முன்பே அதற்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கிய விவசாயிகள், ஏற்கனவே குளத்து வடிகால் வாரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படி வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என புகார் கூறி உள்ளனர்.

Next Story