அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்: போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்டியலை மருத்துவத்துறைக்கு அனுப்ப நடவடிக்கை


அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்: போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்டியலை மருத்துவத்துறைக்கு அனுப்ப நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 9:02 PM GMT)

தர்மபுரியில் அரசு டாக்டர்கள் நேற்று 7-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்களின் பட்டியலை மருத்துவத் துறைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

தர்மபுரி,

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் தகுதிக்கேற்ற ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் வழங்குவதை போல் ஊதிய உயர்வை முறைப்படி அளிக்க வேண்டும். சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 7-வது நாளாக தொடர்ந்து நடந்தது.

இந்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில் தர்மபுரிஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகாக்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். வேலைநிறுத்தத்தையொட்டி தர்மபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் சிகிச்சை பிரிவின் எதிரே திரண்ட அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்களில் ஒரு குழுவினர் சென்னை சென்று அங்கு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் பணியை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களில் கணிசமானோர் நேற்று மாலை பணிக்கு திரும்பினார்கள். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 217 டாக்டர்களில் 103- டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். தாலுகா மருத்துவமனைகளில் 11 டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை.

வேலைநிறுத்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவருமான டாக்டர் வெங்கடேசனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்களின் பட்டியலை கணக்கெடுப்பு செய்து சென்னையில் உள்ள மருத்துவத்துறைக்கு அனுப்ப துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.


Next Story