15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 31 Oct 2019 11:53 PM GMT (Updated: 31 Oct 2019 11:53 PM GMT)

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி 8 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கோலிவாட்டுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியில் கூட்டணியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதைதொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராஜினாமா கடிதம் கொடுத்த 15 பேர் உள்பட 17 பேரை தகுதி நீக்கம் செய்து அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல். ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் மாஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அந்த 2 தொகுதிகளை தவிர்த்து 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ், 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 8 தொகுதிகளுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதன்படி, 1. எல்லாப்பூர்-பீமண்ணா நாயக், 2. இரேகூர்-பி.எச்.பன்னிகாட், 3. ராணிபென்னூர்-கே.பி. கோலிவாட், 4. சிக்பள்ளாப்பூர்-எம்.அஞ்சனப்பா, 5. கே.ஆர்.புரம்-எம்.நாராயணசாமி, 6. மகாலட்சுமி லே-அவுட்-எம்.சிவராஜ், 7. ஒசக்கோட்டை-பத்மாவதி சுரேஷ், 8. உன்சூர்-எச்.பி.மஞ்சுநாத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கே.பி.கோலிவாட், முன்னாள் சபாநாயகர் ஆவார். அவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஹெப்பால் தொகுதி எம்.எல்.ஏ. சுரேசின் மனைவி பத்மாவதி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

அதே போல் கர்நாடக மேல்-சபை தேர்தலில் கர்நாடக மேற்கு பட்டதாரி தொகுதிக்கு டாக்டர் ஆர்.எம்.குபேரப்பா, கர்நாடக வடகிழக்கு ஆசிரியர் தொகுதிக்கு சரணப்பா மத்தூர் ஆகியோரின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Next Story