கூத்தனூரில், கல்குவாரிகள் மீண்டும் செயல்பட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


கூத்தனூரில், கல்குவாரிகள் மீண்டும் செயல்பட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 10:00 PM GMT (Updated: 1 Nov 2019 6:31 PM GMT)

கூத்தனூரில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்ட அளவில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் கல்பாடி, நாட்டார் மங்கலம், வெங்கலம், வேலூர், கீழக்கரை, அழங்கிலி, புதுநடுவலூர், எளம்பலூர், செங்குணம், கூத்தனூர், தெரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 31 கல்குவாரிகளை 5 ஆண்டுகளுக்கு நடத்துவதற்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் மலை பகுதியில் செயல்படும் கல்குவாரியினால், அதனை சுற்றியிருக்கும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மேலும் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. 

எனவே கூத்தனூர் மலைப்பகுதியில் உள்ள கல்குவாரியை ஏலம் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கல்குவாரி மீண்டும் செயல்படக்கூடாது என்றும் கூத்தனூர் பகுதி பொதுமக்கள் திடீரென்று நேற்று காலை பாடாலூர்- செட்டிகுளம் சாலையில் கூத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கல்குவாரியை மீண்டும் செயல்படக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றை பொதுமக்கள் சிறைபிடித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான போலீசார் மற்றும் செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி பாலுசாமி ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இதேபோல் நேற்று முன்தினம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ள கல்குவாரிகளை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் அந்த கல்குவாரிகள் செயல்படக் கூடாது என்றும் அந்தப்பகுதி பொதுமக்கள் பாடாலூர்- கொளக்காநத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாடாலூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். 

Next Story