கோவில்பட்டி அருகே, தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம்


கோவில்பட்டி அருகே, தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம்
x
தினத்தந்தி 1 Nov 2019 11:00 PM GMT (Updated: 1 Nov 2019 11:50 PM GMT)

கோவில்பட்டி அருகே தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக, அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை கணவரின் குடும்பத்தினர் அடித்து கொலை செய்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரும், அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் மல்லிகா தேவியும் (26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர்.

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் இவர்கள் பக்கத்து ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள வடக்கு தோட்டிலோவன்பட்டியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவரின் குடும்பத்தினர் தன்னை அடிக்கடி சித்ரவதை செய்வதாக, மல்லிகாதேவி தன்னுடைய பெற்றோரின் வீட்டில் கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் கணவரின் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக, மல்லிகாதேவி கஞ்சம்பட்டியில் உள்ள தன்னுடைய அக்காள் செல்வராணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து செல்வராணி தன்னுடைய உறவினர்களை அழைத்து கொண்டு மல்லிகாதேவியின் வீட்டுக்கு சென்றார்.

இதற்கிடையே மல்லிகா தேவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மல்லிகாதேவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து மல்லிகாதேவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கணவரின் குடும்பத்தினர் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும் கூறி, அவரது உறவினர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

உடனே தாசில்தார் மணிகண்டன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், வருவாய் ஆய்வாளர் மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், திருமணமான 6 ஆண்டுகளில் மல்லிகா தேவி இறந்ததால், இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி, விருதுநகர் உதவி கலெக்டருக்கு அறிக்கை அனுப்புவார். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மல்லிகாதேவி எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரிய வரும். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்ட உறவினர்கள், அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story