சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரி ஆவார் சஞ்சய் ராவத் உறுதி


சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரி ஆவார் சஞ்சய் ராவத் உறுதி
x
தினத்தந்தி 2 Nov 2019 12:14 AM GMT (Updated: 2 Nov 2019 12:14 AM GMT)

சிவசேனாவை சேர்ந்தவர் தான் மராட்டிய முதல்-மந்திரி ஆவார் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உறுதிப்பட கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருவதாலும், அதற்கு உடன்பட பா.ஜனதா மறுப்பதாலும் கூட்டணி அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்தநிலையில், சிவசேனாவை சேர்ந்தவர் தான் மராட்டிய முதல்-மந்திரி ஆவார் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்றும் உறுதிப்பட தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியில் 50:50 பார்முலா (சமபங்கு) அடிப்படையில் தான் மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்து உள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரியாக இருப்பார்.

கூட்டணி அரசு அமைப்பதற்காக இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் (பாரதீய ஜனதா) பெரியவர்கள். எனவே ஆட்சியமைக்க அவர்களுக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை.

சிவசேனா முடிவு செய்தால், நிலையான ஆட்சியை அமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மராட்டியத்தில் சில மாவட்டங்களில் பெய்து வரும் பருவம் தவறிய மழையால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்து இருக்கும் பிரச்சினையில் பாரதீய ஜனதாவை விமர்சித்து, சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் வெளி யானது.

அதில், “பயிர்களுக்காக விவசாயிகள் செலவு செய்த பணம் முழுவதும் பருவம் தவறிய மழையால் வீணாகி போய் விட்டது. விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். ஆனால் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டுவதில் தீவிர முயற்சி நடக்கிறது. விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தான் அவசரம் காட்ட வேண்டும். அது புதிய அரசு அமைவதில் அல்ல” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story