குறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி


குறைதீர்க்கும் கூட்டம்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 8:42 PM GMT)

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார்.

கோவை,

கோவையை அடுத்த தென்கரை பேரூராட்சி, கரடிமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து 1,350 மனுக்களை பெற்றுக்கொண்டு 858 பயனாளிகளுக்கு ரூ.16.17 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில், அனைத்து துறை உயர் அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு மாதத்தில் தீர்வு

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை தவிர சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் 110-வது விதியின் கீழ் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இதன் மூலம், அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த ஒரு அலுவலர் குழுவின் மூலம் மனுக்கள் பெறப்படும்.

இங்கு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். பல்வேறு நலத்திட்ட பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படை தேவைகளான சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின் போது தீர்வு காணப்படும். மேலும், இத்திட்டம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்பு திட்டமாக திகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து தென்கரை பேரூராட்சி, மத்தியபாளையத்திலுள்ள மாவட்ட பொது நல முதியோர் இல்லத்தில் ரூ.12.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story