மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி என்று கூறுவதா? பாரதீய ஜனதாவுக்கு சிவசேனா கடும் கண்டனம்


மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி என்று கூறுவதா? பாரதீய ஜனதாவுக்கு சிவசேனா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:30 PM GMT (Updated: 2 Nov 2019 9:28 PM GMT)

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என்று பாரதீய ஜனதா மந்திரி கூறியதற்கு, ஜனாதிபதி உங்கள் சட்டைப்பையில் இருக்கிறாரா? என்று சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைப்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது.

முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாரதீய ஜனதா நிராகரித்து விட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.

இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் போனில் பேசி மாற்று ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். சிவசேனாவின் திட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் சந்தித்து பேச சரத்பவார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஆட்சியமைக்கும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “மாநிலத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலை குறித்து பாரதீய ஜனதா, சிவசேனாவை தவிர, மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை சிவசேனா ஒருபோதும் நிறுத்தவில்லை. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தொடங்கவும் இல்லை” என்றார்.

அடுத்த வார தொடக்கத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக பதவியேற்பார் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விதிமுறைகளின் படி தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார். ஆனால் அரசு அமைய 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியம். யாருக்கு அந்த எண்ணிக்கை இருந்தாலும் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்” என்றார்.

காங்கிரஸ் எம்.பி. உசேன் தல்வாய் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கக்கோரி சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியது குறித்த கேள்விக்கு, “அவரது நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சிவசேனா தேர்தலில் ஒரு கூட்டணியில் போட்டியிட்டது. நாங்கள் கூட்டணி தர்மத்தை காப்பாற்ற கடைசிவரை முயற்சிப்போம்” என்று கூறினார்.

இதற்கிடையே வருகிற 7-ந் தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால், மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என பாரதீய ஜனதாவை சேர்ந்த நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறியதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-

இந்த மிரட்டல் பேச்சுக்கு என்ன அர்த்தம். ஜனாதிபதி உங்கள் சட்டைப்பைக்குள் இருக்கிறார் என்பதா? அல்லது ஜனாதிபதியின் முத்திரை மராட்டியத்தில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் தான் இருக்கிறதா?

தங்களால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் அந்த முத்திரையை பயன்படுத்தி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவோம் என பாரதீய ஜனதா சொல்ல முயற்சிக்கிறதா?

அரசியலமைப்பு சட்டத்தின் மீதான அறிவு இல்லாததையே இந்த பேச்சு காட்டுகிறது. இந்த அச்சுறுத்தல் நிலுவையில் உள்ள சட்டவிதிமுறைகளை தகர்த்துவிட்டு, தாங்கள் விரும்பும் வகையில் காரியத்தை செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம். இது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். நாங்கள் மட்டும் தான் ஆட்சி செய்வோம், மாற்று ஆட்சி குறித்து யாரும் சிந்திக்க முடியாது என்ற அணுகுமுறை இந்த தேர்தல் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் ஜனாதிபதி மிக உயர்ந்த அதிகாரமிக்கவர். அவர் தனி நபருக்கானவர் அல்ல. இந்த நாட்டிற்கானவர். இந்த நாடு யாருடைய சட்டைப்பையிலும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story