வரத்து குறைவு எதிரொலி: திருச்சியில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்வு வெங்காயம் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை


வரத்து குறைவு எதிரொலி: திருச்சியில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்வு வெங்காயம் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 5:54 PM GMT)

வரத்து குறைவு எதிரொலியாக திருச்சியில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி,

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயம் விலை உயர தொடங்கியது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.70 வரை ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் விற்பனை ஆனது. வெளிச்சந்தைகளில் வெங்காயம் ரூ.90 வரை விற்பனை ஆனது. அதன் பின்னர் கடந்த மாதம் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை ஆகி வந்தது. இந்நிலையில் பல்லாரி வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. நேற்று காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ பெல்லாரி வெங்காயம் ரூ.80க்கும், சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 90க்கும் விற்பனை ஆனது. கடந்த மாதம் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 40 முதல் 50 வரை விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

மற்ற காய்கறிகள்

இதே போல் மற்ற காய் கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. தற்போது காய்கறிகள் (ஒரு கிலோ) விற்கப்பட்டு வரும் விலையும், கடந்த மாத விலையும் (அடைப்பு குறிக்குள்) வருமாறு:- கத்தரிக்காய் - ரூ.30 (ரூ.15), உருளை கிழங்கு - ரூ.80 (ரூ.20), தக்காளி - ரூ.30 (ரூ.15), கேரட் - ரூ.50 (ரூ.25), பீன்ஸ் -ரூ.40 (ரூ.30), பீட்ரூட் ரூ.35 (ரூ.20), வெண்டைக்காய் ரூ.40 (ரூ.20), முள்ளங்கி -ரூ.30 (ரூ.15), அவரைக்காய் - ரூ. 50 (ரூ.30), புடலங்காய் ரூ.40 (ரூ.20), முருங்கை காய் - ரூ.150 (ரூ.60), மாங்காய் ரூ.60 (ரூ.30), பாகற்காய் ரூ.40 (ரூ.25). மல்லி கட்டு ரூ. 50 (ரூ.20).

காய்கறிகள் விலை உயர்வுக்கான காரணம் பற்றி திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது:-

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தும் 40 முதல் 50 லாரிகள் வரை காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தான் அதிக அளவில் வெங்காயம் வருவது உண்டு. ஆனால் அங்கு கடுமையான மழை காரணமாக வெங்காய லாரிகள் வரத்து வெறும் 4 ஆக குறைந்து விட்டது. இதன் காரணமாக வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது. தமிழகத்திலும் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து விட்டது. முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வந்ததாலும் காய்கறிகள் விலை உயர்ந்து விட்டது. மழை பெய்வது நின்றால் காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story