வாங்கிய கடனை திருப்பி தராததால் - நகை தொழிலாளியை கடத்திய நண்பர் கைது


வாங்கிய கடனை திருப்பி தராததால் - நகை தொழிலாளியை கடத்திய நண்பர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 7:44 PM GMT)

வாங்கிய கடனை திருப்பி தராததால் நகை தொழிலாளியை கடத்திய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டீஸ்வரன் (வயது 40). தங்க நகை செய்யும் தொழிலாளி. கொடுங்கையூர் அமுதம் நகரைச் சேர்ந்தவர் பாலமுரளி (44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

வியாபாரம் தொடர்பாக புண்ணியகோட்டீஸ்வரனுக்கு, பாலமுரளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை கடனாக கொடுத்தாக தெரிகிறது. இதற்கிடையில் பாலமுரளி, தான் கொடுத்த கடனை திரும்ப தரும்படி பலமுறை கேட்டும் புண்ணியகோடீஸ்வரன் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுரளி, தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து புண்ணியகோட்டீஸ்வரனை கடத்திச்சென்று, கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட் காலனியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்துவைத்தார்.

பின்னர் புண்ணியகோட்டீஸ்வரனின் அண்ணன் சீனிவாசனுக்கு போன் செய்து, “என்னிடம் கடனாக வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு உனது தம்பியை மீட்டு செல்” என்று கூறினார்.

இதுபற்றி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சீனிவாசன் தகவல் தெரிவித்தார். அங்கிருந்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் உத்தரவின் பேரில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் மற்றும் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு சென்று வீட்டில் அடைத்து வைத்து இருந்த புண்ணியகோட்டீஸ்வரனை மீட்டனர்.

இது தொடர்பாக பாலமுரளியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவருடைய நண்பர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story