செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்


செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 9:29 PM GMT)

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியருக்கு நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் கந்தசஷ்டி விழாவினை யொட்டி கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தனர். அப்போது கோவில் முன்பு உள்ள வீதியில் சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.

நேற்று காலை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதில் செட்டிகுளம், சத்திரமனை, வேலூர், குரூர், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜா, தக்கார் பாரதிராஜா, கந்தசஷ்டி விழாக்குழுத் தலைவர் வெங்கடாஜலபதி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். மேலும் இன்று (திங்கட்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கந்தசஷ்டி பெருவிழா நிறைவு பெறுகிறது.

Next Story