கரூர் நகராட்சியில் குடிநீர்மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


கரூர் நகராட்சியில் குடிநீர்மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 9:42 PM GMT)

கரூர் நகராட்சியில் குடிநீர்மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் அட்ரியன் பள்ளியில் இருந்து கரூர் நகராட்சி கழிவுநீர்் வடிகால் வரை ரூ.3 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவாக ஒரு நகராட்சிக்கு சாலை போடுவது உள்ளிட்ட பணிகளுக்காக ஆண்டிற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படும். ஆனால், இனாம்கரூர், கரூர் மற்றும் தாந்தோன்றி ஆகிய பகுதிகள் அடங்கிய பெருநகராட்சியாக விளங்குகிற கரூர் நகராட்சிக்கு ரூ.15 கோடி நிதியினை தமிழக முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். ரூ.4 ஆயிரம் கோடி அளவிலான அந்நிய செலவாணி ஈட்டித்தரக்கூடிய கரூர் நகரின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், கடந்த ஆண்டு நகரப்பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்திக்கொடுக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் ரூ.20 கோடி அளவிலான நிதி பெற்றுத்தர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழுவீச்சில் பணிகள்

கரூர் நகராட்சியில் கச்சேரிபிள்ளையார் கோவில் தெரு, கேவிபி நகர் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. நகராட்சிக்குட்பட்ட 46,000 குடிநீர் இணைப்புகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, குடிநீர்மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. அதன் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்திட்டங்கள் முழுமையாக நிறைவுபெற்ற பின்னர் தினந்தோறும் மக்களுக்கு சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். மேலும் குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக கரூர் உருவாகும்.

குப்பை சேகரிக்க புதிய லாரி

ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கப்படுவதன் மூலம் மகாத்மா காந்தி நகர் முதல் சின்னாண்டாங்கோவில் வரை கழிவு நீர் தேங்காமல் சீராக செல்லும். இதற்காக டிஜிட்டல் முறையில் இந்த பகுதிகள் அளவெடுக்கப்பட்டு 6 அடி அகலத்திலும், 6அடி ஆழத்திலும் 950 மீட்டர் நீளத்திற்கு இந்த கழிவு நீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது. மேலும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி பகுதிகளில் ரூ.6 கோடி மதிப்பில் சிமெண்டு சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குப்பைகளை சேகரிக்கும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய லாரி வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்்க்கண்டேயன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story