சேலத்தில், 2 கடைகளில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


சேலத்தில், 2 கடைகளில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:18 PM GMT (Updated: 3 Nov 2019 10:18 PM GMT)

சேலத்தில் 2 கடைகளில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்,

தமிழகத்தில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பெரும்பாலான பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரகசியமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

ராஜஸ்தான், உத்தரபிர தேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து இந்த வியாபாரத்தை சிலர் நடத்துகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளிலும், பார்சல் சர்வீஸ் மூலமாகவும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு குடோன்களில் பதுக்கப்படுகிறது. பின்னர் வியாபாரிகள் அதனை பிரித்து கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார்கள். கடந்த மாதம் சூரமங்கலத்தில் உள்ள பார்சல் கம்பெனிக்கு 2 டன் அளவுக்கு புகையிலை பொருட்கள் வந்தன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் பொன்னம்மாப்பேட்டையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 2 கடைகளில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

Next Story