ஈரோடு அருகே, வெவ்வேறு இடங்களில், தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பலி


ஈரோடு அருகே, வெவ்வேறு இடங்களில், தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 3 Nov 2019 10:15 PM GMT (Updated: 3 Nov 2019 11:52 PM GMT)

ஈரோடு அருகே வெவ்வேறு இடங்களில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள ஆனங்கூர் ரெயில் நிலையத்திற்கும் சங்ககிரி ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் தண்டவாள பகுதியில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயில் மோதி வாலிபர் இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதேபோல் ஈரோடு அருகே உள்ள மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்திற்கும், வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story