உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் தளவாய்சுந்தரம் பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் தளவாய்சுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 2:39 PM GMT)

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று தளவாய்சுந்தரம் கூறினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட  அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா கொட்டாரத்தில் நடந்தது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்க வேண்டும். அப்படி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் தான் வெற்றி பெற முடியும்.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

குமரி மாவட்டத்தில் மக்கள் பணி ஆற்றுவதில் அ.தி.மு.க. வினர் தான் அதிக அளவில் ஈடுபட்டு உள்ளனர். எனவே நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் அ.தி.மு.க. கைப்பற்றுவது உறுதி. இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அனைத்து தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். இப்போதே உள்ளாட்சி தேர்தல் பணியாற்ற தொண்டர்கள் தயாராக வேண்டும்.

ஜனவரி 1–ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த சட்டசபை பொது தேர்தலில் சுரேஷ் ராஜன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதித்து போட்டியிட நான் தயாராக உள்ளேன். அதேபோல மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவும் நான் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மாநில இலக்கிய அணி இணைசெயலாளர் கவிஞர் சதாசிவம்,தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், நிர்வாகிகள் லதா ராமச்சந்திரன், ராஜன், பாக்கியலட்சுமி, தம்பித்தங்கம், வின்ஸ்டன், ஆனந்த், சுந்தர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story