குறைதீர்க்கும் நாள் கூட்டம்: காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள அனுமதிகோரி மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள அனுமதிகோரி மனு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 7:06 PM GMT)

கரூரில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள அனுமதிகோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக் களை பெற்றார்.

கூட்டத்தில், கரூர் மாவட்ட அமராவதி மற்றும் காவிரி மாட்டு வண்டி உரிமையாளர் கள் நலசங்கத்தினர் அதன் தலைவர் அசுரன் தலைமை யில், திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கரூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாய பணிகளை போதிய அளவில் மேற்கொள்ள முடிவதில்லை. எனினும் காவிரி, அமராவதி ஆறுகளில் நீண்ட காலமாக மணல் அள்ளி கட்டுமான பணிகளுக்கு கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். அரசின் தொகுப்பு வீடு, பசுமை வீடு கட்டுமான பணிகளுக்கு மணல் வழங்கினோம். இந்த நிலையில் திடீரென மணல் அள்ள அனுமதி மறுக்கப்படுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே புலியூர், மேலப் பாளையம், கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, பள்ளபாளை யம் உள்ளிட்ட இடங்களில் காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க அனுமதி வழங்கிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதே போல், மாயனூர் வட்டார மாட்டுவண்டி உரிமையாளர் கள் சங்க தலைவர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோரும், மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.

கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா?

கரூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் அளித்த மனுவில், கரூர் மாவட்டத்தில் பழமையான கோவில்கள் உள்ளன. இவற்றின் நிலங்கள் கோவில் பராமரிப்பு, பூஜை ஆகியவற்றுக்காக முன்னோர் களால் சிலரிடம் ஒப்படைக்கப் பட்டது. தற்போது இது தொடர்பாக பட்டா வழங்கிட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே இந்த ஆணையை ரத்து செய்து, கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்று கூறியிருந்த னர்.

புகளூர், வாங்கல், நெரூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், தமிழ்நாடு காகித ஆலை நிறுவன கழிவுநீரானது, புகழூரான் வாய்க்காலில் கலப்பது வாடிக்கையாகி வருகிறது. அதன் வடிநீரானது வாங்கல், நெரூர் வாய்க்கால் வழியாக சென்று காவிரியாற்றில் கலக்கிறது. இதன் விளைவாக தோட்டக்குறிச்சி கிராமத்தி லிருந்து நெரூர் வரை விவ சாயம் பாதிப்படைகிறது. நிலத்தடிநீர் மாசடைகிறது. எனவே இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலை கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

வேகத்தடை அமைக்க கோரிக்கை

லாலாபேட்டை சமூக ஆர்வலர் நாகராஜன் அளித்த மனுவில், லாலாபேட்டை கொடிக்கால் தெரு முருகன் கோவில் வீதி, கள்ளப்பள்ளி ஆதிதிராவிட காலனி உள்ளிட்ட இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளன. அதில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. எனவே இங்கு தூய்மை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந் தார்.

மண்மங்கலம் அரங்கநாதம் பேட்டையை சேர்ந்த சட்டப்பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் உள்ளிட்டோர் அளித்த மனுவில், நெரூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திராள், காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல் வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதிகப் படியான வாகனங்கள் அந்த கோவில் பஸ் நிறுத்தம் அருகே வருவதால் அடிக்கடி விபத்துகள் நடக் கிறது. எனவே இதனை தடுக்க 4 இடத்தில் வேகத் தடை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்த னர்.

கலைகூத்தாடிகள் மனு

இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை தலைவர் தலித் ஆனந்தராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் நத்தமேடு குந்தாணி பாளையத்தில் வசித்து வரும் சர்க்கஸ் கலைக் கூத்தாடிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கலைக்கூத்தாடி களான நாங்கள் தார்ப்பாய் மூலம் கொட்டகை அமைத்து நீண்டகாலமாக வசித்து வருகிறோம். இதனால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீட்டில் நுழைவதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் மழைகாலத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி வீடுகட்ட வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந் தனர். குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி குப்பாச்சிப் பட்டி தங்கராசு உள்பட விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

ஆதிதமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் அளித்த மனுவில், ஏமூரில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையில் பழுதடைந்துள்ள சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கூறியிருந்த னர். தாந்தோன்றிமலையில் அரசால் கட்டப்பட்ட நாடகமேடையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். அங்குள்ள சமுதாயக்கூடம் பூட்டிய நிலையில் உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்பேத்கர் மக்கள் அமைப்பு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தனர்.

அரவக்குறிச்சி வட்டம் தும்பிவாடி அருகே ஆனூரில் உள்ள கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஆனூர் அம்மன் கோவில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இந்த கோவில் உள்ளது. தீரன் சின்னமலையின் வம்சாவளியை சேர்ந்த மோகன் என்கிற தேவசேனாபதியை தலைவராக கொண்டு செயல்படுகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சில தனியார் அமைப்பினர் சட்டத்திற்கு புறம்பாக கிரையம் பெற்றுள்ளனர். அந்த நிலத்தை தவறாக விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

காசோலை

கூட்டத்தில், கிருஷ்ணராய புரம் வட்டம் வெள்ளைய கவுண்டம்பட்டி கருப்பன் மகன் பிரபாகரன் என்பவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததால், அவரின் தாயார் ரெங்கமாள் என்பவருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை யையும், மனவாடி புனித அந்தோணியார் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக் குழந்தைகள் அன்றாடம் தன் சுயதேவை களை தாங்களே பூர்த்திசெய்து கொள்வதற்கு, பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கணினியையும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் பாலசுப்ரமணியன், கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story