திருச்செந்தூர் அருகே பயங்கரம்: பெண்ணை அவதூறாக பேசிய தொழிலாளி குத்திக்கொலை


திருச்செந்தூர் அருகே பயங்கரம்: பெண்ணை அவதூறாக பேசிய தொழிலாளி குத்திக்கொலை
x
தினத்தந்தி 4 Nov 2019 10:00 PM GMT (Updated: 4 Nov 2019 8:26 PM GMT)

திருச்செந்தூர் அருகே பெண்ணை அவதூறாக பேசிய தொழிலாளி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ராணிமகாராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இதில் இளைய மகன் வேல்குமார் (வயது 33), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாக வில்லை.

கடந்த 2012-ம் ஆண்டு முத்து, ஊர் தலைவராக இருந்தார். அப்போது ஊர் வரவு செலவு கணக்கு கேட்டது தொடர்பாக, முத்துவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த கேசவன் (43) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்து தாக்கப்பட்டார். கேசவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் கேசவன் இரும்பு கம்பியால் வேல்குமாரையும் தாக்கினார். இந்த வழக்கு விசாரணை திருச்செந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் ராணிமகாராஜபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு வேல்குமார் தன்னுடைய நண்பரான ஜவகருடன் சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கேசவன் மனைவியை வேல்குமார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கேசவனுக்கும், வேல்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த கேசவன், அவருடைய நண்பரான அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி பாண்டியன் மகன் முத்துசெல்வம் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து, வேல்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் வயிறு, மார்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த வேல்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கேசவன், முத்துசெல்வம் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட வேல்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கேசவன், முத்துசெல்வம் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்செந்தூர் அருகே தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story