துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ தங்கபிஸ்கட்கள்


துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ தங்கபிஸ்கட்கள்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:15 PM GMT (Updated: 5 Nov 2019 7:52 PM GMT)

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 5½ கிலோ எடைகொண்ட தங்கபிஸ்கட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் நடத்திய சோதனையில் தங்கம் எதுவும் சிக்கவில்லை.

அதன்பின்னர், பன்னாட்டு விமானமாக வந்த துபாய் விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு செல்ல தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் கழிவறையில் 4 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர்.

உடனே இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 4 பார்சல்களையும் பிரித்து பார்த்தபோது, அதில் 48 தங்க தங்கபிஸ்கட்கள் இருந்ததை கண்டனர்.

பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருப்பதால், உள்நாட்டு முனையம் வழியாக விமானம் செல்வதை அறிந்து தங்க தங்கபிஸ்கட்களை கழிவறையில் மறைத்து வைத்து கடத்தல்காரர்கள் கடத்த முயற்சி செய்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 600 கிராம் கொண்ட 48 தங்க தங்கபிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்தவர்கள் யார்? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story