மாமல்லபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


மாமல்லபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 5 Nov 2019 8:00 PM GMT)

மாமல்லபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு முன்னர் அர்ச்சுனன் தபசு அருகில் சாலைகள் சீரமைக்கப்பட்டு அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடை வைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் வருவாய்த்துறை சார்பில் பாடசாலை தெருவில் தொல்லியல் துறை இடத்தை தவிர்த்து சாலை தடுப்புக்கு முன் பகுதியில் உள்ள கிழக்கு பக்கத்தில் கடை வைக்க அனுமதி வழங்கினர்.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வருவாய்த்துறையின் உத்தரவை மதிக்காமல் வழக்கம் போல் அர்ச்சுனன் தபசு எதிரில் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் புராதன சின்னங்களுக்கு அருகில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்தனர். இது அங்கு பார்வையிடவரும் சுற்றுலா பயணிகளுக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு புராதன சின்னங்களுக்கு அருகில் அமைத்துள்ள கடைகளை அகற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

வரைமுறைப்படுத்த வேண்டும்

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும்போது அர்ச்சுனன் தபசின் அழகிய தோற்றம் கடைகளால் மறைக்கப்படுகின்றன என்றும், பாடசாலை தெருவில் மட்டும் கடைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாமல்லபுரம் போலீசில் தொல்லியல் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தை மீறி கடை அமைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல் துறையிடம் வலியுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, கடைகள் வைக்க இடம் ஒதுக்கி, வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டருக்கும் தொல்லியல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

எச்சரிக்கை

இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா தலைமையில், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் அர்ச்சுனன் தபசு மற்றும் கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் தொடர்ந்து முக்கிய புராதன பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைப்பவர்கள் மீது போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாமல்லபுரம் தொல்லியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதை முன்னிட்டு மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு மற்றும் கடற்கரை சாலையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story