பல்லடம் அருகே, பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை


பல்லடம் அருகே, பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 9:04 PM GMT)

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காமநாயக்கன்பாளையம், 

பல்லடம் அருகே உள்ள மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவருடைய மகன் சரவணன் (வயது 29). இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பொள்ளாச்சியில் உள்ள கோவிலுக்கு ஒரு காரில் நேற்று முன்தினம் சாமி கும்பிட சென்றார். இவர்களுடன் ஆறுச்சாமியும் சென்றார். அங்கு அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பல்லடம் அருகே சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்தினர். பின்னர் சரவணனை தவிர காரில் இருந்த அனைவரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுவிட்டனர். அப்போது சரவணன் தனக்கு வயிறு சரியில்லை. சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டு காரிலேயே அமர்ந்துகொண்டார். பின்னர் சாப்பிட்டுவிட்டு வந்த ஆறுச்சாமி ஏன் சாப்பிடவில்லை என்று சரவணனிடம் கேட்டுள்ளார்.

தந்தையிடம் பேசிக்கொண்டிருந்த சரவணன் திடீரென்று காரில் இருந்து இறங்கி ஓடிப்போய் அருகில் இருந்த பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் வாய்க்கால் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் விரைந்து வந்து சரவணனை தேடினார்கள். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கள்ளிபாளையம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் சரவணன் இறந்த உடலை போலீசார் நேற்று மீட்டனர். பின்னர் அவருடைய உடலை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் எதற்காக வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story