கணவன் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த பரிதாபம்


கணவன் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:15 PM GMT (Updated: 7 Nov 2019 8:30 PM GMT)

மார்த்தாண்டம் அருகே கணவன் இறந்த சோகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே நெல்வேலியை சேர்ந்த அம்புரோஸ். இவரது மனைவி ஸ்டெல்லா பாய் (வயது 55). அம்புரோஸ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்பு ஸ்டெல்லா பாய் மிகவும் சோகத்துடன் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்து வந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் ஸ்டெல்லா பாய் விஷம் குடித்த நிலையில் கணவரின் கல்லறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் விசாரணை

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்டெல்லாபாய் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடரும் சோகம்

அம்புரோஸ்-ஸ்டெல்லாபாய் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருந்தனர். மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். மகனுக்கு திருமணமாகி சில மாதங்களில் மனைவி பிரிந்து சென்றார். இதனால், மனமுடைந்த மகன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

மகன் இறந்த சோகத்தில் இருந்து வந்த அம்புரோஸ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார். இதைதொடர்ந்து அவரது மனைவியும் தற்போது இறந்துள்ளார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story