ஏரியூரில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ மறியல்


ஏரியூரில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ மறியல்
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 8:44 PM GMT)

ஏரியூரில் வாரச்சந்தை வியாபாரிகள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஏரியூர்,

ஏரியூரில் வாரச்சந்தை அமைந்துள்ள பகுதியில் பஸ் நிலையம் கட்டுவதற்காக ஆயத்த பணிகளை அரசு அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பஸ் நிலையம் அமைக்க அளவீடுசெய்யும் பணி நேற்று தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வியாழக்கிழமைகளில் இங்கு வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் பஸ் நிலைய ஆய்வு பணி குறித்து முன்கூட்டியே தகவல் தராததால் நேற்று வழக்கம் போல் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வியாபாரத்திற்காக வாரச்சந்தைக்கு வந்திருந்தனர். ஆனால் அங்கு கடை வைக்க அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்ததால், அவர்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

தொடர்ந்து அதிகாரிகளை கண்டித்து வாரச்சந்தை வியாபாரிகள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மறியலால், பள்ளி-கல்லூரி வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பின்னர் நேற்று ஒரு நாள் மட்டும் சந்தை பகுதியில் கடைகள் வைத்துக்கொள்ள வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்தவாரம் சந்தைக்காக மாற்று இடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாரச்சந்தை வியாபாரிகளின் ‘திடீர்’ சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.




Next Story