அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்தது: மீன் வியாபாரி பலி; தம்பி படுகாயம்


அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்தது: மீன் வியாபாரி பலி; தம்பி படுகாயம்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 7 Nov 2019 9:22 PM GMT)

புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் மீன் வியாபாரி பலியானார். அவரது தம்பி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி, 

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா மகன் ஆறுமுகம் (வயது 43). மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய தம்பி பரமசிவன் (36). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் துண்டானது. அண்ணன்-தம்பி 2 பேரும் ஒரு பயணிகள் ஆட்டோவில் மீன்களை வாங்கி செல்வதற்காக நெல்லையில் இருந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கு இருந்து மீன்களை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் நேற்று அதிகாலை நெல்லைக்கு திரும்பினர். ஆட்டோவின் பின் பகுதியில் மீன்கள் வைக்கப்பட்டு இருந்ததால் ஓட்டுனர் இருக்கையில் 2 பேரும் அமர்ந்து இருந்தனர். ஆட்டோவை ஆறுமுகம் ஓட்டினார்.

புதுக்கோட்டை அருகே உள்ள வாகைகுளம் சந்திப்பு பகுதியில் ஆட்டோ சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து உடனடியாக புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்த போது, ஆறுமுகம் பலியானதும், பரமசிவன் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. போலீசார் பரமசிவனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் மீன் வியாபாரி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story