முன்விரோதத்தில் மனைவி கண்முன் கோவில் நிர்வாகி குத்திக்கொலை - பூசாரி கைது


முன்விரோதத்தில் மனைவி கண்முன் கோவில் நிர்வாகி குத்திக்கொலை - பூசாரி கைது
x
தினத்தந்தி 7 Nov 2019 11:15 PM GMT (Updated: 7 Nov 2019 9:57 PM GMT)

பழனியில் கோவில்களை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் மனைவி கண்முன் கோவில் நிர்வாகியை குத்திக்கொன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.

பழனி, 

பழனி இடும்பன்மலை அருகே வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இங்கு சிவன், மாசாணியம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்த ஆசிரமம் மற்றும் கோவில்களை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா (வயது 57) என்பவர் நிர்வகித்து வந்தார். இவர் பழனி அடிவாரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும் (40), 2 மகன்களும் உள்ளனர். இந்த ஆசிரமத்தில் உள்ள கோவிலில் பழனியை சேர்ந்த தர்மராஜ் (48) என்பவர் பூசாரியாக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே ஆசிரமத்தில் உள்ள கோவில்களை நிர்வகிப்பது தொடர்பாக தர்மராஜிக்கும், மலர்கனிராஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை மலர்கனிராஜா தனது மனைவியுடன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆசிரமம் அருகில் அவர்கள் வந்தபோது, அங்கு நின்றிருந்த தர்மராஜ் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் மலர்கனிராஜாவை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மலர்கனிராஜாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

தனது கண்முன் நடந்த இந்த சம்பவத்தை கண்டு விஜயா கதறி அழுதார். பின்னர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய மலர்கனிராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கனிராஜா பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இதுதொடர்பாக தர்மராஜை போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story