அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு, புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு, புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:00 PM GMT (Updated: 8 Nov 2019 9:24 PM GMT)

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று(சனிக்கிழமை) தீர்ப்பு கூறப்பட உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்மி பூமி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று(சனிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. எனவே நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தியது.

அதனை தொடர்ந்து புதுவை போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசார், பொதுமக்களுடன் நல்லுறவு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் அயோத்தி தீர்ப்பின் போது பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ யாரும் வெளிப்படுத்தக்கூடாது. யாரும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடக்கூடாது. தீர்ப்புக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ சமூக வலைதளங்களில் யாரும் கருத்துகள் வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாக்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ் நிலையத்தில் வெளியூரிலிருந்து பஸ் மூலம் வந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். புதுவை முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது இருந்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story