மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:15 PM GMT (Updated: 8 Nov 2019 9:24 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த தீபாவளி முதல் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பணிகள் நிறைவு பெறாததால் லட்டு பிரசாதம் வழங்குவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் லட்டு தயாரிக்கும் எந்திரம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதற்கான விழா காலை 10 மணிக்கு கோவிலில் நடைபெற்றது. மதுரை மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடினர். அதன்பின்பு சென்னை தலைமை செயலகத்தில் இ்ருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் தி்ட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

அதன்பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தக்கார் கருமுத்துக்கண்ணன் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதத்தை வழங்கினார். மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு வரும் பக்தர்களுக்கு அம்மன் சன்னதி 2-ம் பிரகாரம் கூடல்குமரர் சன்னதி அருகே 2 வரிசைகளில் இலவச லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன்முறையாக இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நடை திறந்்ததில் இருந்து இரவு நடை சாத்தப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும். லட்டை கையில் உருட்டும் போது அதன் வடிவமும், எடையும் மாறுபடும். எனவே தான் அதற்கான எந்திரம் வாங்கப்பட்டு சுத்தமான முறையில் லட்டு தயார் செய்யப்படுகிறது.

ஒரு மணி நேரத்துக்கு 30 கிராம் எடை கொண்ட 2,400 லட்டுகள் தயார் செய்யப்படும். தினமும் குறைந்தது 20 ஆயிரம் லட்டுகளை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோவில் நிதியில் இருந்து 2 கோடியே 10 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கோவில் நிதியின் 3 முதல் 4 சதவீதம் ஆகும். மேலும் சித்திரை திருவிழா மற்றும் திருவிழா காலங்களிலும், அய்யப்ப பக்தர்கள் வரும் போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு மற்றொரு லட்டு எந்திரமும் வாங்க உள்ளோம். இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்துவோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லட்டு பிரசாதம் பெற்ற பக்தர்கள் இந்த திட்டத்துக்கு வரவேற்்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவில்களின் சொத்துகளைப் பாதுகாத்து பராமரிப்பது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலமாக முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும், நாள் முழுவதும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலூர் மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் 4,116 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரசுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 2,930 சதுர அடி பரப்பளவில் 150 நபர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் கூடம்,

காஞ்சீபுரம் மாவட்டம், பீர்க்கன்காரணை சூராத்தம்மன் கோவிலில் 4,381 சதுர அடி பரப்பளவில் 500 பேர் கலந்து கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையில், நிலை-3 செயல் அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 96 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story