வண்ணாரப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு


வண்ணாரப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Nov 2019 10:35 PM GMT (Updated: 8 Nov 2019 10:35 PM GMT)

வண்ணாரப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 17 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

பெரம்பூர், 

சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27). இவருடைய மனைவி விஜயலட்சுமி (24). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை பக்கத்தில் இருக்கும் விஜயலட்சுமியின் தாய் வீட்டில் வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவர்கள், தாங்கள் வைத்த இடத்தில் சாவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில், பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மர்மநபர்கள், சாவியை எடுத்து கதவை திறந்து நகை, பணத்தை திருடிச்சென்று இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12-வது தெருவில் வசித்து வருபவர் கலைச்செல்வன் (40). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார்.

நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 பவுன் தங்க நகை மற்றும் அரைக்கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story