இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரம்: திருவள்ளுவர் சிலையை கண்காணிக்க 3 கேமராக்கள்


இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரம்: திருவள்ளுவர் சிலையை கண்காணிக்க 3 கேமராக்கள்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 6:33 PM GMT)

தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிலையை கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் அவமதித்தனர். இது தொடர்பாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 5-ந் தேதி பா.ஜ.க.வினர் பாலாபிஷேகமும், 6-ந் தேதி இந்து மக்கள் கட்சியினர் ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திருவள்ளுவர் சிலை இருக்கும் வீதியில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி, வெளிநபர்கள் அவ்வழியாக செல்ல தடைவிதித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

மேலும் திருவள்ளுவர் சிலையை நிரந்தரமான தடுப்புகளை ஏற்படுத்தும் வகையில் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திருவள்ளுவர் சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் திருவள்ளுவர் சிலையை 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வீதியில் நடந்து செல்பவர்களை கண்காணிக்க சிலைக்கு எதிரே உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 2 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை அகன்ற திரையுடன் கூடிய டி.வி. மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story