அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி


அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2019 11:15 PM GMT (Updated: 9 Nov 2019 7:19 PM GMT)

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது என்று அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.

திருச்சி,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காக்கவும், அமைதி நிலவவும், நாட்டின் ஒற்றுமைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது கண்டனத்துக்குரியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை காட்டுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதகம் வந்தால் மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களிடையே ஆதரவு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக காங்கிரஸ் தலைமை தயாராகி வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகும் கருப்பு பணம் அதிகரித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி., திருச்சி மாவட்ட தலைவர்கள் ஜவகர் (மாநகர்), கோவிந்தராஜ் (தெற்கு), கலை (வடக்கு) மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாலக்கரை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதையொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

Next Story