திண்டிவனத்தில் பயங்கரம்: கத்தியால் குத்தி டிரைவர் கொலை


திண்டிவனத்தில் பயங்கரம்: கத்தியால் குத்தி டிரைவர் கொலை
x
தினத்தந்தி 9 Nov 2019 11:30 PM GMT (Updated: 9 Nov 2019 7:48 PM GMT)

ரூ.2 ஆயிரம் கடனை திருப்பி கேட்டதால் கத்தியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டிவனத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெலாக்குப்பம் சாலையை சேர்ந்தவர் ராஜா மகன் சிவா(வயது 24). டிரைவரான இவர், சொந்தமாக சரக்கு வாகனம் வைத்திருந்தார். இவரும், திண்டிவனம் வசந்தபுரம் அன்புநகரை சேர்ந்த விஜயகுமார் மகன் யுவராஜ்(22) என்பவரும் நண்பர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜ், சிவாவிடம் ரூ.2 ஆயிரம் கடனாக வாங்கினார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை. கடனை திருப்பி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு யுவராஜ், சிவாவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் தருவதாகவும், திண்டிவனம் மாரியம்மன் கோவில் அருகில் வருமாறும் கூறினார். அதன்படி சிவா, தனது நண்பர்களான அவரைப்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் சதீஷ்(23), துலுக்காணம் தெருவை சேர்ந்த பழனி மகன் சந்தோஷ்(23) ஆகியோருடன் அங்கு சென்றார்.

அங்கு யுவராஜ், தனது நண்பர்களான காவேரிப்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் சரத் என்கிற வெங்கடேசன்(28), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம்(22) ஆகியோருடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் யுவராஜ் தரப்பினர் சிவாயை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் நிலைகுலைந்து, ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். உடனே யுவராஜ் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சிவாவை, அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து சிவாவின் தாய் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், சரத், செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story