வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்


வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 8:21 PM GMT)

இண்டூர் அருகே வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலியானாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூரை அடுத்துள்ள கும்பலப்பாடியைச் சேர்ந்தவர் சிவசக்தி. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் மோனிஷா (வயது 6). சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு சிவசக்தி, இவரது மனைவி வினோதா, மகள் மோனிஷா, மகன் ஹரிஷ் ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

இதனிடையே அந்த பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திடீரென வீட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மோனிஷா மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். மேலும் அருகில் படுத்து இருந்த சிவசக்தி படுகாயம் அடைந்தார். இவருடைய மனைவி வினோதா, மகன் ஹரிஷ் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

தீவிர சிகிச்சை

மேலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவசக்தியின் அண்ணன் பச்சியப்பன் மகன் அன்பரசு (16) என்பவரும் மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் காயம் அடைந்த சிவசக்தி, அன்பரசு ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இண்டூர் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story