எட்டயபுரம் அருகே,லாரி மீது கார் மோதியதில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்


எட்டயபுரம் அருகே,லாரி மீது கார் மோதியதில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 8:23 PM GMT)

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் பண்ருட்டியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

எட்டயபுரம், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி என்ற நந்தகுமார் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் சிலருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவில் நந்தகுமார் உள்ளிட்ட 8 பேர் ஒரு காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகனான தமிழக வாழ்வுரிமை கட்சி நகர தொழிற்சங்க செயலாளர் ஜார்ஜ் பிராங்கிளின் (32) காரை ஓட்டிச் சென்றார்.

நேற்று காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை கடந்து கீழ ஈரால் நாற்கரசாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதியானது, லாரியின் அடிப்பகுதிக்குள் புகுந்ததால், அப்பளம் போன்று நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஜார்ஜ் பிராங்கிளின், காரில் இருந்த நந்தகுமார் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரில் இருந்த வைத்தியநாதன் (48), பாலு (36), ராஜ் (36), சவுத்ரி (28), ரமேஷ் (40), செந்தில்குமார் (35) ஆகிய 6 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். லாரியின் அடிப்பகுதிக்குள் புகுந்த காரை கிரேன் மூலம் வெளியே இழுத்து எடுத்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வைத்தியநாதன் உள்ளிட்ட 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த ஜார்ஜ் பிராங்கிளின், நந்தகுமார் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் ஏழூரைச் சேர்ந்த இருளாண்டி மகன் தங்கவேலிடம் (43) விசாரித்து வருகின்றனர். ஐதராபாத்தில் இருந்து உளுந்து லோடு ஏற்றிய லாரி, தூத்துக்குடிக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story