அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2,000 போலீசார் பாதுகாப்பு


அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2,000 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 8:32 PM GMT)

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநில எல்லையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி,

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி நகர் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 250 போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இதே போல், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், மாதையன் தலைமையில் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

சோதனைச்சாவடி

ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில் ஓசூரில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், மசூதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாகலூர் ரோடு சர்க்கிள், எம்.ஜி.ரோடு, ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், பஸ் நிலையம்் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் ஓசூர் ஜூஜூவாடி, அந்திவாடி, கக்கனூர் செல்லும் சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்ட பின்னரே, வாகனங்களை செல்ல அனுமதித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து காவல் நிலைய இன்்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், தீர்ப்புக்கு பின்னர், பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் இனிப்பு வகைகளை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்ய வேண்டாம் என கடைக்காரர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மசூதிகள், பள்ளி வாசல்கள், முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் தொடர்ச்சியான ரோந்து பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களான தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய சாலை சந்திப்புகளிலும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். 

Next Story