சேலத்தில் கூட்டுறவு வாரவிழா ஆலோசனை கூட்டம்


சேலத்தில் கூட்டுறவு வாரவிழா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 8:52 PM GMT)

சேலத்தில் கூட்டுறவு வாரவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

சேலம்,

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவினை சிறப்பாக கொண்டாட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வாரவிழா

வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 7 நாட்களுக்கு கூட்டுறவு வாரவிழா நடைபெறவுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் கொடி ஏற்றுதல், வண்ண விளக்குகளால் அலங்கரித்தல், மரக்கன்றுகள் நடுதல், கால்நடை சிகிச்சை முகாம், விவசாயிகள் கருத்தரங்கம், உறுப்பினர் சந்திப்பு முகாம் மற்றும் கல்வித் திட்டம், விற்பனை மேளா, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கருத்தரங்கம், இளைஞர் ஈர்ப்பு முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும். இது தொடர்பான விழா நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜா, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மிருணாளினி, சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எஸ்.வெங்கடாசலம், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஜெயராமன், சேலம் கூட்டுறவு அச்சக தலைவர் கந்தசாமி, சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட பொது மேலாளர் யசோதாதேவி, சேலம் சரக துணைப்பதிவாளர் சுருளியப்பன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story