அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 8:56 PM GMT)

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

அயோத்தி வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பினை தொடர்ந்து, நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற மத வழிப்பாட்டு தலங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் நேற்று தீவிரமாக கண்காணித்தனர்.

1,500 போலீசார்

இதேபோல் கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் ஈரோடு மாவட்டத்துக்குள் ஊடுருவுகின்றனரா? என்பதையும் போலீசார் கண்காணித்தனர்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியினை மேற்கொள்ள போலீசார் வருவாய் துறையினரின் வாகனங்களை பயன்படுத்தினர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறும்போது, ‘அயோத்தி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை’ என்றார்.


Next Story