760 பயனாளிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - சபாநாயகர், அமைச்சர் வழங்கினர்


760 பயனாளிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - சபாநாயகர், அமைச்சர் வழங்கினர்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 9:36 PM GMT)

அவினாசி அருகே 760 பயனாளிகளுக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால், அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் வழங்கினர்.

அவினாசி,

அவினாசியை அடுத்த நம்பியாம்பாளையத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். விழாவில் சபாநாயகர் ப.தனபால், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

சமூக நலத்துறையின் சார்பில் 204 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 300 மதிப்பில் திருமண உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. மகளிர் திட்டத்தின் சார்பில் 25 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களும், வருவாய்த்துறை சார்பில் 71 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 175 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையையும் 23 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும், 6 பயனாளிகளுக்கு கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 53 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் 2 பயனாளிகளுக்கு முதிர்கன்னி உதவித்தொகையும், 3 பயனாளிகளுக்கு நலிந்தோர் குடும்ப தொகையினையும் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 54 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டன.

வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 18 ஆயிரத்து 984 மதிப்பில் வேளான் உபகரணங்களும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 54 பயனாளிகளுக்கு ரூ.97 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வீடுகளும், நம்பியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 14 பேருக்கு ரூ.19 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 760 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நம்பியம்பாளையம் ஊராட்சியில் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தானிய கிடங்கு கட்டிடம், துளுக்கமுதுர் ஊராட்சியில் ரூ.8.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டிடம், தேசிய ரூர்பன் இயக்கம் திட்டத்தின் கீழ் நம்பியம்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரை மட்டத்தொட்டி, தெக்கலூர் ஊராட்சி சென்னிமலைபாளையத்தில் ரூ.9½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட தொட்டி, செம்பியநல்லூர் ஊராட்சி வெள்ளியம்பாலயத்தில் ரூ.10.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட தொட்டி.

வேலாயுதம்பாளையம் ஊராட்சி பூலக்காட்டுபாளையம் மாரியம்மன் கோவில் அருகில் மற்றும் ஆட்டையம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் தலா ரூ.10.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைமட்ட தொட்டி, ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையலறை கட்டிடம் என அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.96 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 10 கட்டிடங்களையும் சபாநாயகர் ப.தனபால் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் மு.சுப்பிரமணியம் அவினாசி நிலவள கூட்டுறவு சங்கத்தலைவர் அ. ஜெகதீசன் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சேகர், அவினாசி தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகரன், சாந்தி லட்சுமி உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story