புதுச்சேரியில் காற்றின் நிலை திருப்தி அதிகாரி தகவல்


புதுச்சேரியில் காற்றின் நிலை திருப்தி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 10:05 PM GMT)

டெல்லி, சென்னையில் காற்று மாசடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் காற்று மாசு அதிகமில்லாதது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை சுற்றுச்சூழல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

டெல்லியில் காற்று மாசு காரணமாக வாகன பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியைப்போன்று சென்னையிலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.

புதுவையிலும் கடந்த சில நாட்களாக காலையில் சென்னையை போன்று பனிமூட்டம் காணப்படுகிறது. வாகனங்கள் முன்விளக்கினை எரியவிட்டபடியே இயக்கப்படுகின்றன. இதற்கு காற்று மாசு காரணமாக இருக்குமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதுதொடர்பாக புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அந்த துறையின் முதுநிலை பொறியாளர் ரமேஷ் கூறியதாவது:-

காற்றில் துகள்களின் அளவு

புதுவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் காற்றின் ஈரப்பதம், வேகம் ஆகியவை சீராகவே உள்ளது. காற்றில் ஒரு கனசதுர மீட்டரில் 100 மைக்ரோகிராம் நுண் துகள்கள் இருக்கலாம். ஆனால் புதுவையில் 52 மைக்ரோ கிராம் முதல் 69 மைக்ரோ கிராம் அளவுக்கே நுண்துகள்கள் உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே காற்றில் நுண்துகள்கள் உள்ளன.

காற்றின் நிலை திருப்தி

எனவே புதுச்சேரி மக்கள் காற்று மாசு குறித்து கவலைப்பட தேவையில்லை. மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசு குறித்து தனது அளவீட்டை மிகச்சிறந்தது, திருப்தி, அபாயகரமானது என்ற 3 நிலையாக பிரித்து உள்ளது. அந்த வரிசையில் புதுவையானது காற்றின் நிலை திருப்திகரமாக உள்ளது என்ற அளவீட்டை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story