அரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது


அரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 9 Nov 2019 10:34 PM GMT (Updated: 9 Nov 2019 10:34 PM GMT)

இருளஞ்சேரி ஊராட்சியில் பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது.

பூந்தமல்லி, 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருளஞ்சேரி, இருளஞ்சேரி காலனி பிளேஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் இருந்து 38 மாணவ-மாணவிகள் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடத்தின் அருகே கூடுதல் வகுப்பறை கட்டிடமும் கட்டப்பட்டு உள்ளது. இந்த 2 பள்ளிக்கட்டிடங்களில் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்து வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகின்றது. இதனால் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பள்ளி கட்டிடத்திற்குள் மழை நீர் ஒழுகி வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து இந்த பள்ளியின் தலைமையாசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் அமைத்து தரவேண்டும் என பலமுறை மனுவாக அளித்துள்ளார்.

இந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வகுப்பறையின் மையப்பகுதியில் விழுந்தது. மேற்கூரையில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தவாறு உள்ளது.

காலை நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் யாரும் இல்லாததால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியைக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் சம்பவ இடத்திற்கு வந்து மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததை பார்வையிட்டு தரையில் சிதறி கிடந்த சிமெண்டு பூச்சுகள் அகற்றப்பட்டது. மேலும் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை அந்த கட்டிடத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் மற்றொரு கட்டிடத்தில் வைத்து வகுப்புகளை நடத்தினார்கள்.

இந்த பள்ளி கட்டிடத்தை இனிமேலும் கல்வித்துறை அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இடித்து அகற்றி அங்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story