‘இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்’ அயோத்தி தீர்ப்பு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து


‘இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்’ அயோத்தி தீர்ப்பு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து
x
தினத்தந்தி 10 Nov 2019 12:23 AM GMT (Updated: 10 Nov 2019 12:23 AM GMT)

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.

மும்பை,

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றை தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பாக கூறி உள்ளது. இது இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கொண்டாடுமாறு சிவசேனா தொண்டர்களை கேட்டு கொள்கிறேன்.

இந்த நேரத்தில் 1990-ம் ஆண்டு ராமஜென்ம பூமி இயக்கத்தை தோற்றுவித்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, விஸ்வஇந்து பரிஷத் மறைந்த தலைவர் அசோக் சிங்கால், வாஜ்பாய், பிரமோத் மகாஜன், அத்வானி ஆகியோரை நினைத்து பார்க்கிறேன்.

கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அயோத்திக்கு சென்று இருந்தேன். அங்கு பிரார்த்தனை செய்து சரயு ஆற்றங்கரையில் நடந்த பூஜையிலும் கலந்து கொண்டேன். அப்போது நான் சத்ரபதி சிவாஜி பிறந்த இடமான சிவ்னேரி கோட்டை மண்ணையும் என்னுடன் எடுத்து சென்று இருந்தேன். அதிசயம் நடந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடக்க வேண்டும் என வேண்டினேன். அந்த அதிசயம் ஒரு ஆண்டுக்குள் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று வெளிப்படுத்தியது போன்ற புரிதல் மற்றும் பக்குவத்துடன் எல்லோரும் இருந்தால் இந்தியா சக்திவாய்ந்த நாடாகும். அயோத்திக்காக ரதயாத்திரை நடத்திய அத்வானியை சந்திக்க உள்ளேன். ராமஜென்மபூமி இயக்கம் மிகப்பெரிய போராட்டம். அதை நடத்திய சிலர் நம்மோடு தற்போது இல்லை. சிலர் ராமஜென்ம பூமி போராட்டத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் எல்லோருக்கும் தலைவணங்குகிறேன். வருகிற 24-ந் தேதி அயோத்தி செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story