மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை


மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 3:03 PM GMT)

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்த கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 3–வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் கன மழை பெய்கிறது. அதே சமயம் நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட கிழக்கு மாவட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக அடையாமடையில் 126 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

களியல்–4.4, சிற்றார் 1–10.4, குழித்துறை–38, பேச்சிப்பாறை–2, பெருஞ்சாணி–3.8, புத்தன்அணை–3, சிற்றார் 2–13.6, சுருளோடு–13.4, தக்கலை–16, பாலமோர்–9.2, மாம்பழத்துறையாறு–20, ஆனைகிடங்கு–25.6, முக்கடல்–7 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

அணை நிலவரம்

மழை காரணமாக அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. எனினும் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 608 கனஅடி தண்ணீர் வந்தது.

இதே போல பெருஞ்சாணி அணைக்கு 668 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 261 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கனஅடியும் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் பெருஞ்சாணி அணையில் இருந்து 500 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 12 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 261 கனஅடியும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

திற்பரப்பு அருவி

மலையோர பகுதியில் பெய்து வரும் கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் இருந்து ஆக்ரோ‌ஷமாக பாய்ந்தோடும் தண்ணீர் அங்குள்ள நீச்சல்குளத்தையும், கல் மண்டபத்தையும் மூழ்கடித்து செல்கிறது. இதனால் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை நேற்று 3–வது நாளாக நீடித்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். அவர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.


Next Story