சீர்காழி அருகே, பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவி கொலை - டிரைவர் கைது


சீர்காழி அருகே, பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவி கொலை - டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 3:31 PM GMT)

சீர்காழி அருகே பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்த பின் மாணவி வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அருகே உள்ள வாய்க்கால் கரையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடுகளை வீட்டுக்கு அழைத்து வர வாய்க்கால் பகுதிக்கு சென்றார்.

அதன்பிறகு மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அருகே உள்ள வாய்க்கால் கரையின் மறைவான பகுதியில் மாணவி காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மாணவி உடலை பிரேத பரிசோதனைக்கு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின் போது போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கல்யாணசுந்தரம்(வயது30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கல்யாணசுந்தரத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாய்க்கால் அருகே தனியாக நடந்து சென்ற மாணவியை கண்ட கல்யாணசுந்தரம் அவளை பின் தொடர்ந்து சென்று தவறாக நடக்க முயன்றதும் இதற்கு மாணவி உடன்படாததால் அவளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த விஷயத்தை மாணவி தனது பெற்றோரிடம் கூறி விடுவார் என்ற பயத்தில் கல்யாணசுந்தரம் மாணவியின் கழுத்தில் தனது கால்களால் மிதித்து கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல தனது வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கல்யாணசுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கல்யாணசுந்தரத்துக்கு திருமணமாகவில்லை என்றும் அவர் டிரைவராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவெண்காடு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story