விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 5:56 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு சத்துமிகு சிறுதானியங்கள் குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, சத்துமிகு தானியங்கள் கையேட்டை வெளியிட்டார். கருத்தரங்கையொட்டி அமைக்கப்பட்டு இருந்த தானியங்கள் கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார். கருத்தரங்கில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானிய பயிர்கள் பயிரிடுவது மிக குறைவாக உள்ளது. சிறுதானிய பயிர்கள் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தருபவையாக உள்ளன. சத்துமிகு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நமது பாரம்பரிய உணவு வகைகளில் அதிக அளவில் சிறுதானியங்கள் இடம்பெற்று வந்தன. சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருப்பதால் இவைகளின் உற்பத்தியையும், மக்கள் பயன்பாட்டினையும் அதிகரிக்க இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

விவசாயிகள் சத்துமிகு சிறு தானியங்களை லாபகரமாக விளைவிப்பது குறித்தும் மக்களின் தேவை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். சத்துமிகு சிறுதானியங்களுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்கள் குறித்தும், விளைவிக்கப்பட்ட சத்துமிகு சிறுதானியங்களை சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு கூறப்படும் கருத்துக்களை இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளாத மற்ற விவசாயிகளுக்கும் எடுத்து சொல்லி, வரும் ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துமிகு சிறுதானிய பயிர்கள் உற்பத்தி பரப்பை பல மடங்கு அதிகரித்து அதிக உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் சிறப்பாக லாபம் ஈட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர்கனகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாநில ஆலோசகர் தனசேகரன், வேளாண்மை துணை இயக்குனர்கள் தமிழ்மலர், ராஜாசிங், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) வசந்தி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story