மலைப்பாதையில் பள்ளம் தோண்டுவதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்


மலைப்பாதையில் பள்ளம் தோண்டுவதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 6:26 PM GMT)

சிறுமலை மலைப்பாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அந்த இடங் களில் ஒளிரும் பட்டைகளை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல், 

சிறுமலை மலைப்பாதையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக மலைப்பாதையோரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பள்ளங்கள் அமைக்கப்பட்டுள்ளதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் மணல் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டைகளும் மலைப்பாதையோரத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.ஆனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது உடனடியாக தெரியாது. இதனால் அவர்கள் ஓட்டி வரும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், சிறுமலை மலைப்பாதையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை வாகனங்கள் கடந்து செல்லும் போது தார்சாலை பெயர்ந்துவிட்டால் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கும் இடங்களில் சாக்குமூட்டைகளை மட்டும் வைக்காமல் இரவில் ஒளிரும் பட்டைகளையும் வைக்க வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் கவனமுடன் மலைப்பாதையில் தங்கள் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியும். விபத்துகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். எனவே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கும் இடங்களில் இரவில் ஒளிரும் பட்டைகளை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story